கொட்டும் மழைக்கு மத்தியிலும் கோலாகலமாக நடைபெற்ற கோறளைப்பற்று பிரதேச செயலக தைப்பொங்கல் விழா -2024
கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கல்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள ஆலயங்கள், கிராமமட்ட சமூக அமைப்புக்கள் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் விழாவானது 19.01.2024 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு உலகப்புகழ்பெற்ற உல்லாசபுரிகளில் ஒன்றான பாசிக்குடா கடற்கரை விளையாட்டு முற்றத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக கல்குடா மகா விஷ்ணு ஆலயத்திலிருந்து கலாசார பண்பாட்டு பவனியுடன் ஆரம்பமாகி நிகழ்வு நடைபெறும் இடத்தை சென்றடைந்ததும் பிரதான பொங்கல் பானையில் புத்தரிசியிட்டு பிரதேச செயலக பிரிவில் உள்ள 12 கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களால் விதம்விதமான சுவையுடைய பொங்கல் பானைகள் வைத்து சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கோறளைப்பற்று பிரதேச அறநெறிப்பாடசாலைகள், கலைமன்றங்களை சேர்ந்த மாணவர்களின் கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. இதனயடுத்து கல்குடா வலம்புரி மற்றும் வேளாங்கள்னி விளையாட்டு கழகங்களின் ஏற்பாட்டில் கலாசார பாரம்பரிய விளையாட்டுக்களான கரும்பு உடைத்தல், போர்த்தேங்காய் உடைத்தல் முதலான விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசில்களும், கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களை கௌரவிக்கும் வகையில் சான்றிதழ்களும், பரிசுப்பொதிகளும் வழங்கிவக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், கணக்காளர் திரு.ஜே.ஜோர்ச் ஆனந்தராஜ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆர்.கங்காதரன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.புனிதநாயகி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் கல்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த இந்து ஆலயங்களின் நிர்வாகிகள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மீனவர் சங்கங்கள், மரண ஆதார சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், விளையாட்டு கழகத்தினர், ஏனைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா உல்லாச பயணிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.














